Translate

புதன், 26 செப்டம்பர், 2012

சனீஸ்வர தோஷம் - பிடியிலிருந்து விலக - சித்தர் வழி முறை

சனீஸ்வர தோஷம் - பிடியிலிருந்து விலக - சித்தர் வழி முறை 




மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து துன்பங்களையும் கண்டறிந்து அவைகளை இன்பமயமான வாழ்க்கையாக மாற்றுவதற்காக சித்தர்களாலும்,முனிவர்களாலும்,ரிசிகளாலும் இறைவனின் அருளால் தங்கள் ஞானத்தால் கண்டறிந்த தெய்வீக கலைகள்தான் மணி,மந்திரம்,அவுஷதம் என்ற முப்பெரும் கலைகள் ஆகும்.

இவை ஜோதிடம்,மந்திரம்,மருத்துவம் எனப்படும் இப்பெரும் கலை  களினால்  மனித குலம் இன்று வரை மனம் ,உடல் ,வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து விடுபட்டு பெரும் நன்மை அடைந்து வருகின்றது.

மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு துன்பங்களுக்கு நவக்  கிரகங்களின் பார்வை (கதிர் வீச்சு) ஒரு காரணம் என ஜோதிட சாஸ்த்திரம் வலியுறுத்துகின்றது.

நவகிரகங்கள் எனப்படும் ஒன்பது கிரகங்களில் மூன்று கிரகங்கள் தீய பலன்கள் அளிப்பதில் வலிமை வாய்ந்தவை.அவை ராகு,கேது,சனி ஆகும்.இவைகளில் முதன்மையானது சனி என்ற சனீஸ்வர பகவான் தான்.

சனீஸ்வர பகவானின் பிடியிலிருந்து யாரும் தப்ப முடியாது என்பர்.இறை வனாகிய சிவ பெருமானையே ஒரு கணம் பிடித்ததால் தான் சனி ஈஸ்வர பட்டம் கிடைத்து சனீஸ்வரன் ஆனார்.

பனிரெண்டு இராசிகளில் உள்ள இராசிக்காரர்களுக்கு சுமார் ஏழு இராசி களின் அமைப்பு உள்ளவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் ஏழரை சனி, கண்ட சனி,அஷ்டம சனி,போன்ற பாதிப்பு இருந்துகொண்டே இருக்கும். இதனால் அவர்களுக்கு வாழ்வில் எடுத்த காரியங்களில் தோல்வி,பண முடக்கம்,வம்பு சண்டை,வழக்குகள்,அனைத்திலும் சந்தேக மனப் பாண்மை,மனப் பிரம்மை,விரக்தி,தொழில் முன்னேற்றமின்மை,எதிர் காலமே சூன்யமானது போன்ற இன்னல்களுக்கு ஆட்பட்டு வாழ்க்கையை மிகவும் சிரமமாக அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.

சனீஸ்வர தோஷத்தின் பிடியில் உள்ளவர்கள் பல்வேறு கோயில் களுக்குச் சென்று நவகிரகங்களுக்கு தீபம் போட்டும்,அர்ச்சனை, அபிசேகம் செய்தும் சரிவர பலன் காணாமல் மனம் நொந்த நிலையில் இருப்பார்கள்.இதற்கு பரிகாரமாக சித்தர்கள் மிக எளிய வழி முறைகள் வகுத்துள்ளனர்.

சனி தோஷம் - பிடியிலிருந்து விலக அகத்திய பெருமான் கூறும் வழிமுறை பாடல் விளக்கம்.

கோனவனார் குடியிருந்த பிடரிதன்னில் 
கொள்கிநின்றார் சனியனெனும் பகவான்றானே
தானென்ற சனிபகவான் பிடரிமேலே 
தானேறி நின்றுகொண்டு தலைகால் வேறாய் 
கோனென்ற அறிவுதனை நிலைக்கொட்டாமல் 
குடிலமென்ற குடிலமெல்லாங் கூறாய்ச் செய்து 
நானென்ற ஆணுவமே நிலைக்கப்பண்ணி 
நன்னையென்ற வெளிகளெல்லா மிருளாய்க் கட்டி 

கானென்ற கபடமதுக் கேதுவாய் நின்று 
கரையேற வொட்டாமல் கருதுவானே 
கருதுகின்ற சனிபகவான் பிடரிமேலே 
கவிழ்ந்து நின்ற பாசமதைக் களையவேண்டி 
சுருதிபொரு ளானதொரு நாதன்பாதம் 
தொழுதுமன துறுதியினால் துகளறுத்து 
நிருதியெனுஞ் சாபமது நிவர்த்தியாக 
நீமகனே சொல்லுகிறே னன்றாய்க்கேளு

பருதிஎனும் ரவிதனையே நமஷ்கரித்து 
பாங்குடனே ஓம் கிலி சிவவென்று சொல்லே 
சொல்லிடுவாய் தினம்நூத்தி யிருபத்தெட்டு 
சோர்வின்றி மண்டலமே செபித்தாயாகில் 
வல்லுடும்பாய் நின்றசனி மாறிப்போகும் 
மகத்தான மந்திரமுஞ் சித்தியாகும்  

இறைவன் குடியிருக்கும் அறிவாகிய பிடரிதன்னில் சனி பகவான் ஏறி  நின்று கொண்டு அறிவுதனை தலைகீழாய் மாற்றி தான் என்ற ஆணவத்தை நிலைக்கச்செய்து, உண்மையை பொய்யாய் காட்டி,நல்ல வர்களை கெட்டவர்களாகவும்,கெட்டவர்களை நல்லவர்களாகக் காட்டி, புத்தியை மாற்றி,பொய் ,களவு ,மது ,மாது ,சூது ,போன்ற வைகளுக்கு புத்தியை அடிமையாக்கி வாழ்க்கையை கரையேற விடாமல் தடுப்பார்.
நீரில் பாசம் போல் படிந்து நின்றது போல் நம் மேல் படிந்துள்ள சனீஸ்வர தோஷத்தை நீக்கிக்கொள்ள இறைவனின் பாதம் தொழுது ஒரு உபாயம் கூறுகிறேன் .

அதிகாலை குளித்து முடித்து கிழக்கு நோக்கி நின்று கொண்டு பருதி எனும் சூரிய பகவானை வணங்கி "ஓம்  கிலி  சிவ" என்ற மந்திரத்தை  -128-முறை  செபிக்கவும்.இப்படி ஒரு மண்டலம் - 48-நாட்கள் தொடர்ந்து செபித்து வர உடும்பு போல் பற்றி நின்ற சனீஸ்வர தோஷம் விலகி விடும்.இது ஏராளமானோர் செய்து பயனடைந்த முறை.

நன்றி !
ரிசி...
சித்தர் களஞ்சியம் குழு - face book
siddharkalanjiyam@gmail.com     
  
                      
  


சனி, 1 செப்டம்பர், 2012

செங் கற்றாழை கற்பம் - red aloe vera - kayakarpam




செங் கற்றாழை கற்பம் - red aloe vera - kayakarpam

கொள்ளவே சிவப்பான கத்தாழைச் சோறும் 
கொண்டு வர மண்டலந்தா னந்தி சந்தி 
விள்ளவே தேகமது கஸ்தூரி வாசம் வீசும் 
வியர்வைதான் தேகத்தில் கசியாதப்பா 
துள்ளவே நரைதிரைக ளெல்லா மாறும் 
சோம்பல் கொட்டாவி நித்திரையுமில்லை 
கள்ளவே நாகமது உடம்பி லூறும்
கண்களும் செவ்வலரிப் பூப்போலாமே 
                                                    நந்தீசர் - ஞானம் 


சித்தர்கள் குறிப்பிடும் காய கற்ப மூலிகை,தாவர வகைகளில் இன்றைய கால கட்டத்தில் எளிதாக கிடைக்கும் வகைகளில் ஒன்றுதான் கற்றாழை ஆகும் இதனைப் பொதுவாக சித்தர்கள் 'குமரி' எனக் குறிப்பிடுகின்றனர் .உடலினை என்றும் இளமையாக வைக்கும் தன்மை இதற்குண்டு என்ப தனை சித்தர்கள் தங்கள் மெய்ஞானத்தால் கண்டறிந்துள்ளனர்.


பொதுவாக கற்றாழையில் உடலிற்குத் தேவையான வைட்டமின் சத்துக் கள் ஏராளமாக உண்டு.இது உடலில் சேரும் நஞ்சுகளை வெளியேற்றி உடலின் செல்களை உயிர்ப்புடன் காக்கின்றது. எனவே இதனை முறைப் படி உண்டோமானால் முதுமை தோன்றாமல் தேகத்தை என்றும் இளமை யுடன் (காய கற்பம்) காத்துக் கொள்ளலாம்.


சிவப்புக் கற்றாழையை மேலே உள்ள தோலை சீவி நீக்கி விட்டு அதன் சதைப் பகுதியை மட்டும் எடுத்து தண்ணீரில் அலசி விடவும்.பிறகு அந்த தண்ணீரை ஊற்றி விட்டு புது தண்ணீரை விட்டு அலசவும்.இதே போல் ஏழு முறை தண்ணீர் விட்டு கழுவி விட்டு எடுத்து திரிகடுகு தூளில் பிரட்டி  மென்று உண்ணவும்.


இதேபோல் காலை - மாலை உண்ணவும்.தொடர்ந்து ஒரு மண்டலம் - 48-நாள் உண்ணவும்.இதுவே காயகற்பம் ஆகும்.


இதன் பலன்கள் :
உடலில் கஸ்தூரி வாசனை வீசும்,.உடலில் வியர்வை வெளியேறாது, தலை முடி கருக்கும், பார்வைத்திறன் அதிகரிக்கும்.(நரை,திரை)மாறும். உடலில் முழுதும் பிராணன் நிரம்பும்.சோம்பல்,கொட்டாவி,தூக்கம் வராது.மனம் விழிப்பு நிலையில் நின்று "குண்டலினி"யோகம் சித்திக் கும்.   

நன்றி !
ரிசி...
சித்தர் களஞ்சியம் - குழு (face book) 

  


   
  


புதன், 22 ஆகஸ்ட், 2012

மஞ்சள் கரிசலாங்கண்ணி - வெள்ளை கரிசலாங்கண்ணி - மருத்துவ பயன்கள்

மஞ்சள் கரிசலாங்கண்ணி 



வெள்ளை கரிசலாங்கண்ணி 


கரிசலாங்கண்ணி மருத்துவ பயன்கள் 

மஞ்சள் கரிசலாங்கண்ணி பற்றிய பாடல்:

திருவுண்டாம் ஞானத்தெளிவுண்டாம் மேலை
யுருவுண்டா முள்ளதெல்லா முண்டாங் குருவுண்டாம் 
பொன்னாகத் தன்னாகம் பொற்றலைக் கையாந்தகரைத் 
தன்னாகத் தின்றாகத் தான்.

இதனை சமைத்து உண்டு வந்தால் இறைவன் அருளும்,அறிவின் தெளிவும், உடலுக்கு பொன் போன்ற நிறத்தையும்,கொடுக்கும்.குன்மக்கட்டியை நீக்கும்.

வெள்ளை கரிசலாங்கண்ணி பற்றிய பாடல்:

குரற்கம்மற் காமாலை குட்டமொடு சோபை 
யுறர் பாண்டு பன்னோ யொழிய நிரர் சொன்ன
மெய்யாந் தகரையொத்த மீளிண்ணு நற்புலத்துக்
கையாந்தகரை யொத்தக்கால்
                                                   (தேரன் வெண்பா)

இதனால் குரலுறுப்பு நோய்,காமாலை,குட்டம்,சோகை வீக்கம்,பாண்டு,பல் நோய் ஆகியவை போகும்.உடலில் போற்சாயலும்,யாளிக்குள்ள பலமும் உண்டாகும்.

கரிசலாங்கண்ணி யின் வேறு பெயர்கள்: கரிசாலை,கரிப்பான்,கைகேசி,தேக ராஜம்,பிருங்கராஜம்,பொற்றிலைப் பாவை,கையாந்தகரை,போன்றவைகள்.

இம்மூலிகையில் தங்கச்சத்தும்,இரும்புச்சத்தும்,அபரிமிதமாக இருக்கின்றன மணிச்சத்தும்,சுண்ணாம்புச்சத்தும்,வைட்டமின் -A ,வைட்டமின் -C , முதலிய சத்துக்களும்,தாது உப்புக்களும்,மாவுச்சத்தும்,புரதம் போன்றவைகளும் இருக் கின்றன.

மஞ்சள் கரிசலாங்கண்ணி யில் மஞ்சள் பூ பூக்கும்,இது ருசியாகவும் காரமின்றி இருக்கும்.இதனையே உணவுக்காக பயன்படுத்துகின்றனர்.

வெள்ளை பூ உள்ள வெள்ளை கரிசலாங்கண்ணியின் இலை சற்று தடிப்பான கரும்பச்சை நிறமுடைய இலையாக காரமாக இருக்கும்.இதை நெய் விட்டு வதக்கி விட்டால் காரம் போய்விடும் மணமும் ருசியும் கொடுக்கும்.

உணவாகப் பயன்படுத்தும் முறை :

மஞ்சள் கரிசலாங்கண்ணியின் இலைகளை ஆய்ந்து எடுத்து பருப்புடன் சேர்த்து வேக வைத்து சாம்பாராகவும்,கூட்டுக் கறியாகவும்,பொரியலாகவும், கடையலாகவும்,செய்து உணவோடு சேர்த்து உண்ணலாம்.புளி சேர்க்கக் கூடாது,மிளக்காய்க்குப் பதில் மிளகு சேர்க்க வேண்டும்.இதனையே சூப்பாகவும் செய்து உண்ணலாம்.
வெள்ளை கரிசலாங்கண்ணியை நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு வதக்கிய பிறகு மேற்கண்டபடி உணவுகளாகத் தயாரிக்க வேண்டும்.
மஞ்சள் கரிசாலையில் தங்கச்சத்தும், வெள்ளை கரிசாலையில் இரும்புச் சத்தும்  நிறைய இருக்கின்றது.

கரிசாலையின் மருத்துவ குணங்கள் :

கரிசாலையை பால் விட்டு அரைத்து தலையில் தேய்த்து குளித்து வர தலை முடி உதிர்வது நிற்கும்.முடி கறுத்து  வளரும்.கண் நோய் நீங்கும்.சப்த தாதுக்களை வலுப்படுத்தும்.உடலை வலுப்படுத்தும்.
இதனை தினமும் உபயோகித்து வருபவர்களுக்கு இரத்தத்தில் உள்ள கெட்ட நீர் வெளியேற்றப்பட்டு இரத்தம் சுத்தமாகும்.மலச்சிக்கல் நீங்கும்.ஆயுள் விருத்தியாகும்.

கரிசலாங்கண்ணி இலையையும்,கருவேப்பிலை இலையையும் காய வைத்து இடித்து தூள் செய்து இரண்டும் சம அளவு கலந்து கொண்டு காலை மாலை இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து உண்டு வர இரத்த மூலம்,இரத்த சோகை,பெண்களின் மாதவிடாய் சுழற்ச்சி சரியாகும்.

இதன் இலைச்சாறு ஒரு பங்கும் நல்லெண்ணெய் ஒரு பங்கும் சேர்த்து பதமாக  காய்ச்சி எடுத்து வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து முழுகி வந்தால் அனைத்து பித்த ரோகங்களும் நீங்கும்.நரை முடி கருக்கும்.

மஞ்சள் காமாலைக்கு :
இதன் இலையை சுத்தம் செய்து அரைத்து சாறு எடுத்து 25-மிலி வீதம் காலை -மாலை அருந்தி வர கல்லீரல் சுத்தம் அடையும் ,காமாலை நோய் குணமாகும்.
இரத்தத்தில் உள்ள பித்த நீர் வெளியேறி இரத்த சிவப்பணுக்கள் பெருகும்.

வள்ளலார் கரிசாலை குடிநீர் (காபி):

மஞ்சள் கரிசாலை பொடி : ஒரு பங்கு 
தூதுவளைப் பொடி : கால் பங்கு 
மொசுமொசுக்கைப் பொடி :கால் பங்கு
சீரகம் : கால் பங்கு 
இவை அனைத்தையும் பொடித்துக் கலந்து வைத்துக்கொண்டு இரண்டு தம்ளர் நீரில் இரண்டு டீஸ்பூன் அளவு பொடி சேர்த்துக் கொதிக்க வைத்து ஒரு தம்ளர் அளவு காய்ச்சி சுண்ட வைத்து வடிகட்டி இதனுடன் பனை வெல்லம் சிறிது சேர்த்து கலையில் தினமும் அருந்திவர மேற்கண்ட பலன்கள் கிட்டும். 

நன்றி !
அரவின் தீபன்...                      

             
          

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

மூலநோய்க்கு சித்த மருந்துகள் - piles


 மூலநோய்க்கு சித்த மருந்துகள்- piles -




துத்தி மூலிகை 





 குப்பை மேனி மூலிகை 



மூல நோய்க்கு சித்த மருந்துகள் 

காயத்தில் மூலங் கண்ட விதங்கேளு
பாயொத்த தீபனம் பரிந்தேயடக்கினும் 
மாயை மயக்க மலத்தையடக்கினும்
ஓயுற்ற குண்டலினுக்குட் புகும் வாயுவே

என்று திருமூலர் மூல நோயின் உற்பத்தியை விவரிக்கின்றார் தீவிரமான பசியைத் தாங்கி சரியான நேரத்தில் சாப்பிடாதிரு ந்தாலும் ,உடலுறவின் போது சிறுநீர்,மலம் அடக்குவதாலும் , ஒரே இடத்தில் ஆசனங்களில் அமர்ந்து தொழில் புரிவோர்க் கும் மூலாதாரம் எனப்படும் ஆசன வாய்ப்பகுதியில் வெப்பம் மிகுந்து இந்நோய் தோன்றுகிறது .

மற்றும் உணவில் நார்ச்சத்து வகைகளை குறைத்து உண்பதா லும் மலச்சிக்கல் ஏற்பட்டு மூலநோய் ஏற்படும்,அடிக்கடி நீர் அருந்தாமையினாலும் குடல் இளக்கமின்றி இந்நோய் தோன் றும். அதிக உடலுறவு ,அதிக காரமான உணவுஉண்போருக்கும் பெண்களின் குழந்தைப்பேறு கால சமயங்களில் குழந்தை வெளி வரும் போது முக்குவதாலும் மூல நோய் தோன்றும். 

மூலநோயை சித்தர்கள் 21-வகையாகப் பிரித்துள்ளனர். ஆங்கில மருத்துவத்தில் இதனை மூன்று வகையாகக் கூறு கின்றனர்.வெளிப்படையாக நமக்கு புலப்படுவதும் இவைகள் தான்.

1- உள் மூலம்,-ஆசன வாயின் உட்பகுதியில் குருத்து போல் வளர்வது.
2- வெளி மூலம்,-ஆசனவாயின் தசைப்பகுதிகள் பிதுங்கி வெளி வருவது .
3- இரத்த மூலம்,-மலம் வெளிவரும் போது இரத்தம் கசிவது.

மூல நோயின் அறிகுறிகள் :
மலச்சிக்கல்,அடித்தொடை கணுக்கால் வலி குடைச்சல்,உடல் சோர்வு, களைப்பு, ஆசன வாய் எரிச்சல்,ஆசனக்கடுப்பு,மலத்தோடு குருதி கழிதல், மார்பு துடிப்பு,முக வாட்டம்,போன்றவை ஏற்படும்.மேலும் இரத்தமூலம் ஏற்பட்டு தினமும் இரத்தம் வெளி ஏறிக்கொண்டிருந்தால் உடலில் பலம் குறையும்,மயக்கம் உண்டாகும் .
  
மூல நோய் வராமல் தடுக்க :
உணவில் கீரை வகைகள்,காய் பழ வகைகள்,தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடிக்கடி நீர் அருந்தவேண்டும்,தினமும் காலை மாலை மலம் கழித்தல் வேண்டும்,மலச்சிக்கல் உள்ள போது  உடலுறவு கூடாது,தின மும் நடைப் பயிற்சி அல்லது எளிய உடற் பயிற்சி மேற்கொள்ளுதல் நல்லது.உணவில் விளக்கெண்ணை,நெய்,வெங்காயம்,தவறாது சேர்த்தல்  வேண்டும்.கருணைக் கிழங்கு அடிக்கடி உணவில் சேர்த்தல் நன்று.

மூல நோய்க்கு எளிய மூலிகை மருந்துகள்:

1- பிரண்டைக் கொடியின் கணுப்பகுதியை நீக்கிவிட்டு நெய் விட்டு வதக்கி புளி,பருப்பு சேர்த்து துவையல் செய்து வாரம் இரு முறை சாப்பிட்டு  வர மூலம் கரைந்து விடும்.

2- மூல நோய்க்கு துத்தி இலை சிறந்த மருந்தாகும். இரண்டு கை அளவு துத்தி இலை,நறுக்கிப் போட்டு, சிறிது மஞ்சள் தூள்,சிறிய வெங்காயம் பத்து,அரிந்து போட்டு விளக்கெண்ணை விட்டு வதக்கி மிளகுத்தூள்,உப்பு சிறிது சேர்த்து பத்து நாள் தொடர்ந்து சாப்பிட மூல நோய் குணமாகும்.

3- வெளி மூலத்திற்கு துத்தி இலை ஒரு கை பிடி அளவு எடுத்து அதனுடன் சிறிது மஞ்சள்தூள் விளக்கெண்ணை விட்டு வதக்கி இளம் சூட்டுடன் ஆசன வாயில் வைத்து இரவில் கட்டிவர சில நாட்களில் வெளி மூலம் சுருங்கி விடும்.(தினமும் கட்டவும்)

4- நன்றாக செழித்து வளர்ந்த குப்பைமேனி செடியைத் தேவையான அளவு  எடுத்து வந்து தண்ணீரில் அலசி சுத்தம் செய்து வெயிலில் போட்டு நன்கு காய விடவும். காய்ந்த பின் இலை,வேர்,தண்டு அனைத்தையும் இடித்து தூள் செய்து வைத்துக்கொள்ளவும்.இதில் அரை டீஸ்பூன் அளவு எடுத்து பசு வெண்ணை ஒரு எலுமிச்சை அளவு சேர்த்துப் பிசைந்து காலை , மாலை என நாற்ப்பது நாள் சாப்பிட்டு வர அனைத்து மூல வியாதியும் குணமாகும் .
இந்த மருந்துகளைச் சாப்பிட்டு வரும் போது அதிக காரம்,பச்சை மிளகாய்,கோழிக்கறி சேர்க்கக் கூடாது.மிளகு சேர்த்துக் கொள்ளலாம். உடல் உறவு கூடாது.

நன்றி !
அரவின் தீபன்...                                    
   

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

சர்ப்பம் தம்பனம் -பாம்பை கையில் பிடிக்க



சீந்தில் கொடி 



சர்ப்பம் தம்பனம் -பாம்பை கையில் பிடிக்க 

ஆமாப்பா யின்னுமொரு மூலி கேளு
அப்பனே சீந்திற்குக் காப்புக் கட்டி 
தாமப்பா மூலமென்ற மந்திரங் கேளு
சாதகமாய்ச் சொல்லிவிட்டேன் சார்ந்து பாரு 
காமப்பா வம் வம் வங் வங் சிவாவென்று 
கருதிவிடு வுருநூறு காட்டிப் போடு 

ஊமப்பா பொங்கலிட்டு பெலிதானீந்து 
உத்தமனே வேர் பிடுங்கி மஞ்சநூல் சுத்தே
சுத்தியே வளையமிட்டுக் கையிற் போடே 
துஷ்டனென்ற சர்ப்பமெல்லாஞ் சுருங்கிப் போகும் 
                                 தட்சிணா மூர்த்தி திருமந்திரம்...

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பர்.அப்படிப்பட்ட  பாம்பும் நம்மைக் கண்டால் நடுங்கச் செய்யும் மூலிகைகள் ஏராளம் உண்டு.அதில் ஒன்று தான் "சீந்தில் கொடி"என்பதாகும்.

இம் மூலிகைக்கு கன்னி நூல் காப்புக் கட்டி,சாபநிவர்த்தி செய்து மூல மந்திரம் "ஓம் வம் வம் வங் வங் சிவா"என்று 108-முறை செபித்து பொங்கல் படையல் வைத்து எலுமிச்சை பலி கொடுத்து ஆணி வேர் அறாமல் வேர் பறித்து அதனை மஞ்சள் நூலால் சுற்றி வளையம் போல் செய்து கையில் காப்பு போட்டுக் கொண்டு சீரும் பாம்பின் முன் கையை நீட்டினால் அடங்கி ஒடுங்கும்.

நன்றி !
ரிசி...             
<siddharkalanjiyam.blogspot.in>
சித்தர்களஞ்சியம் குழு - facebook 


வியாழன், 16 ஆகஸ்ட், 2012

மிருக தம்பனம் -கொடிய விலங்குகள் வாய் கட்ட


அமுக்கரா செடி 



 கொழுஞ்சி செடி 


மிருக தம்பனம் -கொடிய விலங்குகள் வாய் கட்ட 

முன்பு காலங்களில் காடுகளிலும்,மலைகளிலும் சித்தர்கள், முனிவர்கள் எப்படி கொடிய மிருகங்களின் தொல்லைகள் இல்லாமல் வாழ்ந்தார்கள் என்றால் நமக்கு மிக வியப்பாக இருக்கும்.அவர்கள் தங்களின் தவ வலி மையால் கட்டுப் படுத்தி இருப்பார்களோ என எண்ணத்தோன்றும் .
ஆனால் மூலிகைகளின் மூலம் சுலபமாக கொடிய மிருகங்களைக் கட்டுப்   படுத்தியுள்ளார்கள்.என்பதை சித்தர்களின் பாடல்களில் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.           

ஆவானே யானை சிங்கம் கொடுவாய் புலி 
அத்தனையும் வாய்கட்ட மூலி கேளு 
போவானே அமுக்கரா வெண் கொழுஞ்சி 
பூரணச் சந்திர கிரண வேளை தன்னில்
எவானே காப்புமிட்டு அரிஓம்  என்று 
லட்ச முருவேற்றி வெள்ளி தாம்பிரத்தில்
மூவான குளிசமிட்டுக் கட்டிப் போனால் 
மிருகமெல்லாம் வணங்குமே உனக்குத்தானே


யானை ,சிங்கம்,புலி போன்ற கொடிய மிருகங்கள் நம்மைக் கண்டவுடன் அடங்கி அடிபணிந்து வணங்க அமுக்கரா ,வெண் கொழுஞ்சி இரண்டு மூலிகைகளையும் சந்திர கிரகண நாள் அன்று கிரகணம் பிடிக்கும் வேளையில் கன்னி நூல் காப்புக் கட்டி,சாப நிவர்த்தி செய்து "அரி ஓம்" என என மந்திரம் ஒரு லட்சம் செபித்து ஆணி வேர் அறாமல் பறித்து வந்து இரண்டையும் ஒன்று சேர்த்து பட்டு நூலில் சுற்றி வெள்ளி ,செம்பு சேர்த்து செய்த தாயத்தினுள் வைத்து மூடி வலது கை புஜத்தில் கட்டிக் கொண்டு செல்ல அனைத்து மிருகங்களும் வணங்கும் என்கிறார் மச்சமுனி நாயனார் .
   

நன்றி !
ரிசி...
<siddharkalanjiyam.blogspot.in>
சித்தர் களஞ்சியம் குழு - face book

புதன், 15 ஆகஸ்ட், 2012

புதையல் காணும் மை செய்முறை விபரம்






புதையல் காணும் மை செய்முறை விபரம்

சித்தர்கள் நூல்களில் பல்வேறு மை விபரங்களைக் குறிப்பிட்டுள்ளனர். அவைகளில்  ஸ்ரீ வசிய மை,தெய்வ வசிய மை,ராஜவசிய மை,கண் கட்டு மை,ஜாலக்காள் மை,களவு காணும் மை,மறைவு மை,புதையல் காணும் மை,போன்ற ஏராளமான மை செய்முறைகளை குறிப்பிடுகின்றனர்.
இவைகளை அஞ்சனம் (மை) என பெயர் குறிப்பிட்டுள்ளனர்.
இவைகளை நடைமுறையில் செய்து வெற்றி காண தக்கதொரு குருவின் துணை நிச்சயம் வேண்டும்.கருவும் குருவும் வேண்டும் என்பது உண்மை.
மேற்கண்ட பலவித மை முறைகளில் பாதாள அஞ்சனம் பற்றிய சித்தர் அகத்திய பெருமானின் பாடல்.

தேனான பாதாள வஞ்சனந்தான் 
தேற்றமுள்ள சாதிக்காய் தண்ணீர் மீட்டான் 
மானான தும்பையுடன் கையான் றானும் 
மகத்தான கருந்தும்பை மூலியாமே

மூலியாஞ் சரக்கெல்லாங் கருக்கியப்பா 
முசியாம லாமணக்கு எண்ணை தன்னில்
சாலியாய்த் தானரைப்பாய் சாமம் பத்து 
சலியாமல் கஸ்தூரி பச்சை பூரம் 
வேலியாங் கொடிவேலித் தைலமப்பா 
விட்டுமே குழப்பியதை மத்தித்தேதான் 
பாலியர் மாந்தருக்கு மையை யப்பா
பாதாள வஞ்சனமும் போடுவாயே 

போடுவாய் அஞ்சனத்தை திலதங் கொண்டு 
பொன்னவனே லலாடமதில் வெண்ணீர் பூண்டு 
ஆடுவாய் திருக்கூத்தை மையின் வேக 
மப்பனே வுலகமதி லென்ன சொல்வார் 
நீடுபுகழ் வஞ்சனமாம் நிதியுந்தோன்றும் 
நீடாழி நிதிகலேல்லாங் கண்ணிர்றோன்றும் 
மாடுகண்டு மிருகமெல்லா மெதுவானாலும் 
மகாதேவா கண்ணிற்கு தோன்றும் பாரே

ஜாதிக்காய்,தண்ணீர் மீட்டான்,தும்பை,கையான் தகரை,கருந்தும்பை, இவைகளை கருக்கி ஆமணக்கு எண்ணை விட்டு பத்து சாமம் அரைத்து இதனுடன் கஸ்தூரி,பச்சை கற்பூரம்,கொடுவேலி தைலம் விட்டு குழப்பி மத்தித்து பனிரண்டு வயதுக்குட் பட்ட சிறுவர்களின் நெற்றியில் திலதம் போட்டுப் பார்க்க பூமியில் உள்ள புதையல் எல்லாம் கண்ணில் காட்டும் .
என்கின்றார் அகத்தியர் பெருமான் இவற்றிற்கான மந்திரம் விபரம் அடுத்த பதிவில் வெளியிடுகின்றோம் .

நன்றி!
ரிசி...                  

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

நீர் தம்பனம் -நீர் மேல் நடக்கும் சித்து

கொடிவேலி 



நத்தைச் சூரி 





நீர் தம்பனம் -நீர் மேல் நடக்கும் சித்து 

சூரியனை அரவுதொடும் செவ்வாய் வாரம் 
தீண்டயிலே கொடுவேலி நத்தைச் சூரி 
வீரியமாய் காப்புக் கட்டி பிடுங்கி வந்து 
வித்துவேசணி நமச்சிவாய வென்று 

காரியமாய்க் குளிசமிட்டுச் சூரி வேரைக் 
கட்டியே வாரி தனில் நடந்து பாரே 
வீரியமும் வீழாது சலம் தம்பிக்கும் 
விள்ளாதே கொடிவேலி  விளம்புவேனே 
                                 மச்சமுனி -800,

சூரிய கிரகணம்,செவ்வாய்க் கிழமை வரும் நாளன்று கிரகணம் 
பிடிக்கும் போது "கொடிவேலி" "நத்தைச் சூரி" இரண்டு மூலிகை 
களை காப்புக் கட்டி,"ஓம் வித்து வேசணி நமச்சிவாய" என்று 
உரு செபித்து இரண்டு மூலிகைகளின் வேர்களையும் சேர்த்துக்
கட்டி ஒரு செப்பு தாயத்தினில் அடைத்து இடுப்பில் கட்டிக் கொண்டு ஏரி,குளம்,கடல் போன்றவைகளில் உள்ள தண்ணீரின் மேல் நடக்கலாம் என்றும் அந்த நீர் உறைந்து ஸ்தம்பித்து விடும் என்று மச்ச முனி சித்தர் தனது நூலில் குறிப்பிடுகின்றார் .

நன்றி !
ரிசி ...               


சீதேவி செங்கழுநீர் -இராஜ வசிய மூலிகை




சீதேவி செங்கழுநீர் -இராஜ வசிய மூலிகை

கோணவே சீதேவி செங்கழுநீர் வாங்க 
சொல்லுகிறேன் மந்திரத்தைக் கேளு 

மந்திரம் ஓம் ஸ்ரீம் லட்சுமிதேவி யென்று
மாறாமல் குருகுரு முன் நினைவாய் நீயே 
அந்தரமாய் சொல்லியே ஆணி வேரை
அறாமல் பிடுங்கியதைத் தாமரை நூலால் 

மந்திரமாய்த் திரியாக்கி வேருங் கூட்டி 
இயல்பாகக் கபிலை நெய்யில் மை கூட்டி 
தந்திரமாய்த் திலகமிட அரசரெல்லாந்
தாட்சியன்றி வசீகரமா இருக்குந்தானே 
                        கருவூரார் பலதிரட்டு ...

சீதேவி செங்கழுநீர் இம் மூலிகையை காப்புக் கட்டி, சாப நிவர்த்தி 
செய்து,"ஓம் ஸ்ரீம் லட்சுமி தேவி குரு குரு சுவாஹ"என மந்திரம் 
செபித்து ஆணி வேர் அறாமல் பறித்து வந்து அதன் மேல் தாமரை 
நூலால் சுற்றி காராம் பசு நெய்யில் திரி போட்டு எரித்து மையை 
சேகரித்து திலகமிட்டுக் (பொட்டு) இட்டுக் கொள்ள அரசரெல்லாம் 
வசியமாவார் .அரசு சார்ந்த காரியங்களில் வெற்றி கிட்டும் .

நன்றி !
ரிசி ...           

சித்தர் களஞ்சியம் அறிமுகம்


பதினெண் சித்தர் துதி

நந்தி அகத்தியர் மூலர் புண்ணாக் கீசர் 
நற்றவத்துப் புலத்தியரும் பூனைக்கண்ணர்
நந்திடைக் காடரும் போகர் புலிக்கை யீசர்
கருவூரார்  கொங்கணவர் காலாங்கி 
சிந்தி அழுகண்ணர் அகப்பேய் பாம்பாட்டி 
தேரையரும்  குதம்பையரும் சட்டைநாதர் 
செந்தமிழ் சேர் சித்தர் பதினெண்மர் பாதம் 
சிந்தையுன்னிச் சிரத் தனியாய்ச் சேர்த்து வாழ்வோம் 

நம்   தமிழகத்தில் தோன்றிய தமிழ்ச் சித்தர்கள் இயற்றிய காவியங்களின் பெருமை அளப்பரியது.இவைகளில் யோகம்,ஞானம்,இரசவாதம்,வைத் தியம்,சோதிடம்,மந்திரம்,சரகலை,பஞ்சபட்சி,காயகற்பம்,போன்றவைகள்மட்டுமல்லாமல் புவியியல் இரகசியங்கள்,மூலிகை-தாவரங்களின் சூட் சும இரகசியங்கள்,தாது-சீவ வர்க்க இரகசியங்கள்,பஞ்ச பூத இரகசியங் கள்,நவக்கிரக,பிரபஞ்ச இரகசியங்களை தங்கள் ஞானத்தால் கண்டறிந்து உணர்ந்தவற்றை பல லட்சம் பாடல்களாக இவ் வையகத்திலுள்ளோர் அனைவரும் பயன் பெற வேண்டு மென்ற நோக்கில் வடித்துள்ளனர்.

சித்தர் நூல்களில் உள்ள பல கருத்துக்கள் இன்றைய அறிவியல் உலகில் நம்ப முடியாமல் பிரமிப்பும் ஆச்சரியமும் அளிக்கக்கூடிய ஏராளமான   அதிசயங்கள் உள்ளன.இவைகளை "சித்தர் களஞ்சியம்" தளத்தில் வெளி யிடுகின்றோம்.இவைகளை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து முடிவு காண வேண்டுகிறோம்.

நன்றி !
ரிசி...