Translate

புதன், 26 செப்டம்பர், 2012

சனீஸ்வர தோஷம் - பிடியிலிருந்து விலக - சித்தர் வழி முறை

சனீஸ்வர தோஷம் - பிடியிலிருந்து விலக - சித்தர் வழி முறை 




மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து துன்பங்களையும் கண்டறிந்து அவைகளை இன்பமயமான வாழ்க்கையாக மாற்றுவதற்காக சித்தர்களாலும்,முனிவர்களாலும்,ரிசிகளாலும் இறைவனின் அருளால் தங்கள் ஞானத்தால் கண்டறிந்த தெய்வீக கலைகள்தான் மணி,மந்திரம்,அவுஷதம் என்ற முப்பெரும் கலைகள் ஆகும்.

இவை ஜோதிடம்,மந்திரம்,மருத்துவம் எனப்படும் இப்பெரும் கலை  களினால்  மனித குலம் இன்று வரை மனம் ,உடல் ,வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து விடுபட்டு பெரும் நன்மை அடைந்து வருகின்றது.

மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு துன்பங்களுக்கு நவக்  கிரகங்களின் பார்வை (கதிர் வீச்சு) ஒரு காரணம் என ஜோதிட சாஸ்த்திரம் வலியுறுத்துகின்றது.

நவகிரகங்கள் எனப்படும் ஒன்பது கிரகங்களில் மூன்று கிரகங்கள் தீய பலன்கள் அளிப்பதில் வலிமை வாய்ந்தவை.அவை ராகு,கேது,சனி ஆகும்.இவைகளில் முதன்மையானது சனி என்ற சனீஸ்வர பகவான் தான்.

சனீஸ்வர பகவானின் பிடியிலிருந்து யாரும் தப்ப முடியாது என்பர்.இறை வனாகிய சிவ பெருமானையே ஒரு கணம் பிடித்ததால் தான் சனி ஈஸ்வர பட்டம் கிடைத்து சனீஸ்வரன் ஆனார்.

பனிரெண்டு இராசிகளில் உள்ள இராசிக்காரர்களுக்கு சுமார் ஏழு இராசி களின் அமைப்பு உள்ளவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் ஏழரை சனி, கண்ட சனி,அஷ்டம சனி,போன்ற பாதிப்பு இருந்துகொண்டே இருக்கும். இதனால் அவர்களுக்கு வாழ்வில் எடுத்த காரியங்களில் தோல்வி,பண முடக்கம்,வம்பு சண்டை,வழக்குகள்,அனைத்திலும் சந்தேக மனப் பாண்மை,மனப் பிரம்மை,விரக்தி,தொழில் முன்னேற்றமின்மை,எதிர் காலமே சூன்யமானது போன்ற இன்னல்களுக்கு ஆட்பட்டு வாழ்க்கையை மிகவும் சிரமமாக அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.

சனீஸ்வர தோஷத்தின் பிடியில் உள்ளவர்கள் பல்வேறு கோயில் களுக்குச் சென்று நவகிரகங்களுக்கு தீபம் போட்டும்,அர்ச்சனை, அபிசேகம் செய்தும் சரிவர பலன் காணாமல் மனம் நொந்த நிலையில் இருப்பார்கள்.இதற்கு பரிகாரமாக சித்தர்கள் மிக எளிய வழி முறைகள் வகுத்துள்ளனர்.

சனி தோஷம் - பிடியிலிருந்து விலக அகத்திய பெருமான் கூறும் வழிமுறை பாடல் விளக்கம்.

கோனவனார் குடியிருந்த பிடரிதன்னில் 
கொள்கிநின்றார் சனியனெனும் பகவான்றானே
தானென்ற சனிபகவான் பிடரிமேலே 
தானேறி நின்றுகொண்டு தலைகால் வேறாய் 
கோனென்ற அறிவுதனை நிலைக்கொட்டாமல் 
குடிலமென்ற குடிலமெல்லாங் கூறாய்ச் செய்து 
நானென்ற ஆணுவமே நிலைக்கப்பண்ணி 
நன்னையென்ற வெளிகளெல்லா மிருளாய்க் கட்டி 

கானென்ற கபடமதுக் கேதுவாய் நின்று 
கரையேற வொட்டாமல் கருதுவானே 
கருதுகின்ற சனிபகவான் பிடரிமேலே 
கவிழ்ந்து நின்ற பாசமதைக் களையவேண்டி 
சுருதிபொரு ளானதொரு நாதன்பாதம் 
தொழுதுமன துறுதியினால் துகளறுத்து 
நிருதியெனுஞ் சாபமது நிவர்த்தியாக 
நீமகனே சொல்லுகிறே னன்றாய்க்கேளு

பருதிஎனும் ரவிதனையே நமஷ்கரித்து 
பாங்குடனே ஓம் கிலி சிவவென்று சொல்லே 
சொல்லிடுவாய் தினம்நூத்தி யிருபத்தெட்டு 
சோர்வின்றி மண்டலமே செபித்தாயாகில் 
வல்லுடும்பாய் நின்றசனி மாறிப்போகும் 
மகத்தான மந்திரமுஞ் சித்தியாகும்  

இறைவன் குடியிருக்கும் அறிவாகிய பிடரிதன்னில் சனி பகவான் ஏறி  நின்று கொண்டு அறிவுதனை தலைகீழாய் மாற்றி தான் என்ற ஆணவத்தை நிலைக்கச்செய்து, உண்மையை பொய்யாய் காட்டி,நல்ல வர்களை கெட்டவர்களாகவும்,கெட்டவர்களை நல்லவர்களாகக் காட்டி, புத்தியை மாற்றி,பொய் ,களவு ,மது ,மாது ,சூது ,போன்ற வைகளுக்கு புத்தியை அடிமையாக்கி வாழ்க்கையை கரையேற விடாமல் தடுப்பார்.
நீரில் பாசம் போல் படிந்து நின்றது போல் நம் மேல் படிந்துள்ள சனீஸ்வர தோஷத்தை நீக்கிக்கொள்ள இறைவனின் பாதம் தொழுது ஒரு உபாயம் கூறுகிறேன் .

அதிகாலை குளித்து முடித்து கிழக்கு நோக்கி நின்று கொண்டு பருதி எனும் சூரிய பகவானை வணங்கி "ஓம்  கிலி  சிவ" என்ற மந்திரத்தை  -128-முறை  செபிக்கவும்.இப்படி ஒரு மண்டலம் - 48-நாட்கள் தொடர்ந்து செபித்து வர உடும்பு போல் பற்றி நின்ற சனீஸ்வர தோஷம் விலகி விடும்.இது ஏராளமானோர் செய்து பயனடைந்த முறை.

நன்றி !
ரிசி...
சித்தர் களஞ்சியம் குழு - face book
siddharkalanjiyam@gmail.com